"வேலியில போன ஓனான எடுத்து வேட்டியில விட்டுகிட்ட மாதிரி" - பழமொழி. 


"ரோட்டுல போனவர தூக்கி பைக்குல உக்கார வெச்ச மாதிரி" - புலம்பல் மொழி.

10 மணி. 

நிலவொளியில் நட்சத்திரங்கள். 
பைக் பயணம். 
தனிமைக்கு இசைஞானி தான துணை. 
"உன்ன விட......இந்த உலகத்தில் ஒசந்தது உன்னுமில்ல"னு பாடிக்கிட்டே ரெண்டு கையையும் விட்டு பைக் ஓட்டுனேன். கையால காத்த கட்டிபிடிக்குற காதல் முயற்சி தான் அது. 

இருட்டுல உருவம். அவரையும் பைக்குல கொண்டு போகலாமே...சர்ர்ர்ர்னு பிரேக். அட,தெரிந்தவர் தான். தமிழர். பின் ஸீட்டில் ஏறிக்கொண்டார். கைப்பிடிய திறுகுனேன். பேச ஆரம்பிச்சார்.

நண்பர் : சாப்ட போறேன்...
நான் : மெஸ்சுக்கு தான. நானும் அங்க தான் போறேன்.

நண்பர் : எதுக்கு இப்போ டென்ஷனாகுற ?
நான் : இல்லையே. மெதுவா 40துல தான ஓட்டுறேன்.

நண்பர் : சரி. சீக்ரம் சாப்டு போய் தூங்கு.
நான் (எதுக்கு தூக்கத்த பத்தி பேசுறாருனு சந்தேகத்தோட) : மொதல்ல கட்டு கட்டுனு கட்டணும் பாஸ். அப்புறம் தன்னால தூக்கம் வரும்.

நண்பர் : நீ சாப்பிடலைனா நானும் சாப்பிட மாட்டேன்.
(நான் எப்ப சாப்பிடமாட்டேன்னு சொன்னேன் ? குழப்பம் )

நண்பர் : சாரி மா.

இதுக்கு போய் எதுக்கு சாரி சொல்லணும் ? என்னாச்சி ? எதுக்கு இந்த ஆள் சம்பந்தமில்லாம பேசுறாருனு சந்தேகமா திரும்புனா, ஈஈஈனு பல்ல காட்டுனார்.

அவர் காதுல கைப்பேசி. அடக்கொடுமயே.இவ்ளோ நேரம் இந்த ஆள் அவரோட ஆள் கூட பேசிகிட்டு இருந்திருக்காரா ? என்னோட இல்லயா ? நான் வெறும் ஊறுகாயா ? என்னைய ட்ரைவராக்கிட்டு இவரு காதல் செஞ்சிருக்கார்.

தனியா பாட்டு பாடிகிட்டு வந்தேன் சரி. இப்போ தனியா பேசிக்கிட்டும் வந்திருக்கேனா ?
தனியா இருக்குறவங்களோட தனிச்சிறப்பே இப்படி தனியா புலம்பறது தான்.