3 நாளைக்கு முன்னாடி சத்திரம் பஸ் ஸ்டாண்டுல, ஒரு பாட்டி தரையில உக்காந்து மாம்பழம் வித்துகிட்டிருந்தாங்க. கூறு ஒன்னு 40 ரூபா. 6 பழம் இருந்துச்சு. டெல்லியில இது மாதிரி பழம் பார்த்ததில்ல. சப்பு கொட்டிகிட்டே, பேரம் ஏதும் பேசாம ஆச ஆசயா வாங்கி வந்து ரூமுல பத்திரமா வெச்சிருந்தேன்.

நேத்து ராத்திரி அப்பா ஃபோன் பண்ணினார். "சீக்கிரமா பழத்த சாப்பிட்டுடுடா. வழக்கம் போல மறந்து போய் அழுகவிட்டுடாத"னு நியாபகப்படுத்தினார். 'காலையில சாப்பிடுவோம்'னு நினைச்சிருந்தேன். இன்னைக்கு காலையில எழுந்திரிச்சதுமே பயங்கர வாசம். ஆனா நேரமாகிட்டதால சாப்பிடமுடியல. அவசர அவசரமா காலேஜுக்கு போயிட்டேன்.

சாயந்திரம் காலேஜ் முடிஞ்சதும் தான் நினைப்பு வந்துச்சு. 'ரூமுக்கு போனதும் எல்லாத்தையும் தனியா உக்காந்து ஒரு வெட்டு வெட்டணும்'னு ஜொள்ளுவிட்டுக்கிட்டே,வேக வேகமா குவார்ட்டர்சுக்கு வந்து, 6 மாடி படியேறி, பூட்டியிருந்த என் ரூம திறந்தா... அதிர்ச்சி....ஹால்ல மாம்பழத்தோல் சிதறி கிடக்கு (போட்டோ).மொத்தமும் காலி. எனக்கு ஒன்னுமே புரியல.. பூட்டியிருந்த வீட்டுக்குள்ள இருந்த பழத்த யார் சாப்பிட்டிருப்பா ?

உள்ள வர ஒரே வழி ஜன்னல். அது வழியாத் தான் யாரோ வந்திருக்காங்க.
யார் வந்திருப்பா ?
க்ரில் வெச்ச ஜன்னல். அதுல அதிகப்பட்சமா 10 செண்டிமீட்டர் இடைவேளி தான் இருக்கு.
நிச்சயம் 6 மாடி சுவர் ஏறி, ஜன்னல் வழியா நாய் வந்திருக்க முடியாது.

காக்கா வந்திருக்குமோ ?
பெட்ரூமுல, லக்கேஜ் பேக்குல வெச்சிருந்த 1 கிலோ எடையுள்ள பழப்பைய, காக்காவால தனியா ஹால் வரைக்கும் கொண்டு வர முடியாதே.

அப்ப பூன ஏதாவது வந்திருக்குமா ?
வாய்ப்பேயில்ல. தோல் மட்டும் தான் சிதறியிருக்கு. உள்ள இருக்குற பழம் கொஞ்சம் கூட மிச்சமில்ல. பூனையால இவ்வுளவு neatஆ சாப்பிட முடியாது. அதுவும் என்னைய மாதிரி கொட்டைய வழுச்சு வழுச்சி சொரண்டி சொரண்டி திங்க முடியாது. ஒரு கிராம் கூட மீதியில்ல. தோல பாக்க பாக்க கடுப்பாயிருந்துச்சு.

வேற யாரா இருக்கும் ?
ஊருக்கு வெளிய, மக்கள் நடமாட்டமில்லாத இவ்வுளவு பெரிய campus. எப்போதும் பயங்கறமா காத்தடிக்கும். ஒரு வேள பேயா இருக்குமோ ? ச்ச ச. இருக்காது.பேயெல்லாம் கிடையாதுனு மனச தேத்திக்கிட்டேன்.

ஒரு வேள ரூமோட duplicate key வேற யார்கிட்டயாவது இருக்குமோ ?
Wardenக்கு போன் பண்ணி விஷயத்த சொன்னதும், அவர் பயந்து போய் உடனே வந்தார். வேற 'யார்கிட்டயும் சாவி கிடையாது'னு சொன்னவர், 'இது எப்படி நடந்திருக்கும்?'னு ஆச்சர்யப்பட்டார். புலன் விசாரணைய ஆரம்பிச்சோம். யாருக்குமே புரியல.

பக்கத்து ப்ளாட்ல இருந்த ஒரு மருத்துவர், "இங்க எப்பயாவது குரங்கு வரும்"நு புது தகவல் சொன்னார்.
"ஜன்னல் வழியா குரங்கு வருமா ?"
"வரும் சார்"

"10,12 செ.மீ இடைவெளிக்குள்ள குரங்கு எப்படி நுழையும் ?"
"என் ரூமுக்கு அதுவழியா ஏற்கனவே வந்திருக்கு சார் "

ஓஓ....அடிக்கடி வந்திட்டு போற விருந்தாளியா..நான் தான் அலட்சியமா ஜன்னல் கண்ணாடி கதவுகள மூடாம போயிருக்கேன். ஏமாந்த நேரமா பாத்து ப்ளான் பண்ணி அடிச்சிருக்கு.

திமிர் பிசடிச்ச குரங்கு.பழத்த மட்டும் சாப்பிட்டுட்டு, தோல இங்கயே போட்டுட்டு போய் என்னைய வெறுப்பேத்திடுச்சு. தோலையே ரொம்ப நேரம் குறுகுறுனு பார்த்த Warden, என்னமோ டீசல் இஞ்சின கண்டுபிடிச்ச விஞ்ஞானி மாதிரி,"சார்..நிச்சயம் ஒரு குரங்கு வந்திருக்காது. 2,3 வந்திருக்கும் சார்"நு சத்தம் போட்டு சொன்னார்.
ஓ...ஒரு teamமா தான் வந்திருக்கா ?

'Medical Collegeகு வேலைக்கு போறேன்'னு சொன்னதும்,"ஜாக்கிறதையா இருடா. பசங்க ரொம்ப சேட்ட செய்வானுங்க"னு எச்சரிக்க பண்ணி அனுப்புனாங்க. இனிமே,கழுத்துல ID card மாட்டிகிட்டு சேட்டை செய்றவங்களையும் சமாளிக்கணும், ID Card இல்லாம ஜன்னல் வழியா ரூமுக்கு வந்து சேட்டை செய்றவங்களையும் சமாளிக்கணும்...

ஜன்னல் வழியா வந்துச்சுங்க. சரி.
ஆனா 6 மாடி எப்படி ஏறி இருக்கும் ?
Warden என்னைய கூட்டிகிட்டு போய், "இதோ தெரியுது பாருங்க சார் பைப்பு. அது வழியா ஏறி வந்திருக்கும்"நு செய்முறை விளக்கமெல்லாம் கொடுத்தார்.

"இது வழியா 6 மாடி ஏற முடியுமா ?"
"நீங்க வேற சார். குரங்குங்க மனுசன் மாதிரியே பைப்ப பிடிச்சு தாவி தாவி ஏறி வந்திடும் "

என்னது குரங்குங்க மனுசங்க மாதிரி தாவுமா ? சரியாப்போச்சு. அதுங்க தான் Professional. நாம தான் அதுகள பாத்து காப்பி அடிக்கிறோம். விட்டா, 'விஜயகாந்த் படத்த பார்த்து தான் ஜாக்கிஜான் காப்பியடிச்சார்'னு சொல்வீங்க போல..

என்ன இருந்தாலும் குரங்குங்க செஞ்சது ரொமப தப்பு. ஒன்னு கூட எனக்கு மீதி வெக்கல. கேட்டிருந்தா, நானே அதுங்களுக்கு ஆளுக்கொன்னு கொடுத்துட்டு, நானும் 2 பழத்த சாப்பிடிருப்பேன். Selfish monkeys.







கொசுவ புடிச்சு slideல வெச்சியிருப்போம். அத microscope வழியா பாத்து record noteல வரையணும். இந்த பொண்ணு எப்படி வரஞ்சிருக்கு பாருங்க. cartoon networkல வர கொசு மாதிரியே கண்ணு. onida tv விளம்பரத்துல வர மாதிரியே கொம்பு. யப்பா. என்னா கற்ப்பன ? அதுவும் கொசுவுக்கு புருவம்  வரஞ்சிருக்கியே, நீயெல்லாம் இங்க இருக்க வேண்டிய ஆளேயில்ல மா.


— feeling excited with students.
பெண்கள் 2 வகை.
1.அழகிகள்.
2.பேரழகிகள்.
அப்படியிருக்க, உங்களுக்கு makeup எதற்கு ? 

Makeup போட்டுக்கொள்பவர்கள், இதை ஒரு முறை படியுங்கள்.










https://www.facebook.com/photo.php?fbid=576831975699063&set=a.176945549021043.41321.100001167960450&type=3&theater




இன்னைக்கு Revision exam. நான் supervisor. சபிக்கப்பட்ட வேல. wicket keeper மாதிரி கண்ணுல வெளக்கெண்ணைய 
வெச்சுக்கிட்டு Exam hallல சுத்தி சுத்தி வரணும். ஒருத்தன் பேந்த பேந்த முழிச்சுகிட்டிருந்தான். நினைச்ச மாதிரியே Answer paperல எதுவுமே எழுதியில்ல. 

ஆனா, Question paperல என்ன எழுதியிருக்கான் பாருங்க. 



— feeling ஒன்னுமே இல்லாத இவங்க பேப்பர திருத்துற வேதனை இருக்கே...





"குழந்தைய கொஞ்ச நேரம் பார்த்துக்கோ டா"னு அக்கா தங்கச்சிங்க கேப்பாங்க. ஏமாந்துடாதீங்க. 

'இதுதென்ன பெரிய கம்பு சுத்துற வேலயா'னு நம்பி வாங்கிடாதீங்க.உஷார்.150 காலேஜ் பசங்கள கூட அடக்கிடலாம். ஆனா இந்த ஒரு குழந்தயோட அழுவய மட்டும் அடக்கவே முடியாது. 

எல்லா அனிமல்ஸ் மாதிரியும் கத்திக்காட்டணும். நம்ம முகத்தசைய ரப்பர் பேண்ட் போல இழுத்துக்காட்டணும். நான்ஸ்டாப்பா அழுவும். தொண்டயில மைக் முழுங்குன மாதிரி அழுவும். ஏன் அழுவுதுனு கண்டேபிடிக்க முடியாது. எந்த பாஷையில பேசிப்புரிய வெக்குறதுனே தெரியாது. தூக்கிட்டு தெருவுல நடக்கணும். எல்லாரும் நம்மளத் தான் குத்தவாளி மாதிரி பாப்பாங்க. 

ஆனா தங்கச்சி வந்ததும் அழுவ ஸ்விட்ச அமுக்குன மாதிரி இன்ஸ்டண்டா அழுவய நிறுத்திட்டு சிரிக்கும். இந்த அவமானத கூட பொறுத்துக்கலாம். ஆனா, தங்கச்சி குழந்தகிட்ட போய், "ஏம்மா அழுற ? மாமா அடிச்சானா மா?"னு கேப்பாங்க பாருங்க, அப்ப வருமே கோவம். 

அப்பாவும் அப்ப தான் டைமிங்கா பாடுவார் : "மாமா மாமா மக்கு மாமா”.


 — feeling loved.




ஹரியானாவில் , நாங்கள் தினமும் ஒரு கிராமத்திற்கு போய் மருத்துவ சிகிச்சை செய்கிறோம் (Health Subcentre clinic ). 
இன்று மதியம், ஒரு கிராமத்தில் நானும் இரண்டு பயிற்சி மருத்துவர்களும், OPD முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தோம்.

ஒரு வயதான அம்மா வந்து, "என் பொண்ணுக்கு மருந்து வேணும்"னு கேட்டாங்க."நோயாளி நேரில் வர வேண்டும் அவரை பரிசோதித்த பிறகே மருந்து கொடுப்போம்.பெண்ணை அழைத்து வாங்க"னு சொன்னதற்கு, "ரெண்டு நாள் முன்,என் பெண்ணுக்கு குழந்தை இறந்தே பிறந்தது,அவரால் இவ்வுளவு தூரம் வர முடியாது"னு சொன்னார்.

"குழந்தை இறந்தே பிறந்ததா ? ஏன் ? என்ன ஆச்சு ? நான் அவசியம் அவரை பரிசோதிக்க வேண்டும்.வாங்க உங்க வீட்டுக்கு போகலாம்"னு சொன்னேன்.
என்னை சுற்றி இருந்த கிராம மக்களுக்கு ஆச்சர்யம். எல்லாரும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர். எனக்கு என்னனு புரியலை .


"ஒரு வேளை வீடு ரொம்ப தொலைவா இருக்குமோ ? நடந்தே போகணும் .நான் அவசரபட்டு வாய் விட்டுடேனோ ?" பயம் வந்தது.கிராமத்தில் எப்படி இருந்தாலும் வீடுகள் நெருக்கமாதான் இருக்கும். சரி நடப்போம்னு கிளம்பினேன். 


நோயாளி ஒரு பெண். நான் தனியே பரிசோதிக்க முடியாது . அதனால் இரண்டு நர்சிங் மாணவிகள் மற்றும் அங்கிருந்த அந்த ஊர் ASHAவையும் அழைத்துக்கொண்டு நடந்தோம்.கொஞ்ச தூரத்தில வீடு வந்தது.அது ரொம்ப சின்ன வீடு. மிகவும் ஏழ்மையான குடும்பம். 


என்னை பார்த்ததும் அந்த வீட்டுல இருந்தவங்களுக்கு சந்தோசம். என்கிட்டே ரொம்ப மரியாதையா பேசுனாங்க. நாங்க தேடி வந்த பெண் இருட்டுல ,ஒரு கயித்து கட்டில்ல படுத்து இருந்தார். லைட்போடுங்க னு சொல்லி ,அந்த பெண்ணை பரிசோதிச்சேன். ஏற்கனவே இரண்டு முறை அபார்ஷன் ஆகி இருந்திருக்கு. அவங்களுக்கு thyroid பிரச்சனைனு கண்டுபிடிச்சு , பரிசோதனை செய்யணும் ,மருத்துவமனைக்கு வாங்கனு எழுதி கொடுத்தேன். 


ஒரு மாசத்துக்கு இரும்பு சத்து மாத்திரை கொடுத்தேன். வலி மாத்திரையும் கொடுத்தோம். நர்சிங் மாணவிகளிடம் ,அந்த பெண்ணிடம் எப்படி 'சுத்தமா இருக்கணும்'னு சொல்லி கொடுங்க சொன்னேன். "குழந்தை இறந்ததற்கு அந்த பெண் என்ன செய்வார் ?.அவர திட்டாதீங்க"னு வீட்ல இருந்தவங்களுக்கு அறிவுரை சொன்னேன். "அடுத்த குழந்தைய தள்ளி போடணும், கணவரோட 6 வாரம் சேரக்கூடாது"னு சொன்னேன்.ஒரே சிரிப்பு, வெக்கம்.அந்த வீட்டுல இருந்தவங்களுக்கு ரொம்ப சந்தோசம். நாங்க கிளம்பினோம்.

திரும்பி நடந்து வரும் வழியில் எனக்கு கொஞ்சம் குழப்பமா இருந்துச்சு,'குழந்தை இறந்திருக்கு ,ஆனா அந்த வீட்டு வயதான பெண்கள் வருத்தம் இல்லாம என்னிடம் அன்பா பேசினாங்களே எப்படி?
நான் கேட்காமலேயே கிராமவாசிகள் என்னிடம் சொன்னது :" சார் நீங்க டாக்டர். காலனியில இருக்குற அவங்க வீட்டுக்கு போனதே அவங்களுக்கு ரொம்ப சந்தோசம்".
'காலனி' 'காலனி' என்ற வார்த்தை அடிக்கடி என் காதில் விழுந்தது.

நான் டவுன்ஷிப்பில் வளர்ந்ததால் ஜாதி பிரச்சனை, தாழ்ந்த ஜாதி மக்களின் வலி பற்றி அதிகம் தெரியாது. கிராமத்துல தான் காலனினு தனியா ஒதுக்கி வெச்சுருக்காங்க.இல்ல இவங்களே ஒதுங்கி இருக்காங்களானு தெரியல..

நம்ம நாடே ஒருகாலத்துல காலனி நாடு தான்.ஆனா இப்போ யாராவது நம்மள "காலனி நாடு"னு சொன்னா கோபம் வரும். நாம இந்த நாட்டுல பிறந்ததுக்கு நாம என்ன தப்பு செஞ்சோம் ? அதே போல ஒருவர், குறிப்பிட்ட ஒரு ஜாதியில பிறந்ததுக்கு, அவர் என்ன தப்பு செஞ்சார் ? இப்படி பிரிச்சி பாக்குறவங்க எல்லாம் லூசுங்க.திருத்தவே முடியாதுனு தோணுச்சு.
எப்படி பார்த்தாலும் , "காலனி" என்ற சொல் அருவருப்பா இருக்கு.

2) போன மாசம் ஒரு நாள் பிரசவ வார்டில் வேலை செஞ்சுகிட்டு இருந்தேன்.மதியம் மூணு மணிய தாண்டிடுச்சு.பசி மயக்கம். ஒரு பாட்டி என்கிட்ட சிரிச்சுகிட்டே வந்து , ஸ்வீட் டப்பாவ நீட்டுனாங்க .மகளுக்கு குழந்தை பிறந்த சந்தோசம். வேகமா ஒரு பர்பிய கைல எடுத்து ,வாய்ல போட்டு முழுங்கிட்டேன்.இன்னொன்னு சாப்பிடணும் போல இருந்துச்சு.அவ்வுளவு இனிப்பு. பக்கத்துல இருந்த நர்ஸ் அம்மா, ஸ்வீட் வேணாம்னு சொல்லி இருக்காங்க. கை அழுக்கா இருக்கும். ரத்தக்கறை பட்டிருக்கும்.அவங்க ஸ்வீட் எடுக்காததுக்கு எத்தனையோ காரணம் இருக்கலாம்.உண்மை காரணம் என்னனு எனக்கு தெரியல.இந்த பாட்டி அழ ஆரம்பிச்சுட்டாங்க.எனக்கு ஒண்ணுமே புரியல.பக்கத்துல இருந்தவங்கள விசாரிச்சேன். அந்த பாட்டி 'தாழ்ந்த' ஜாதியாம் .

"நாம கீழ் ஜாதி.அதனால தான் நாம கொடுக்குற ஸ்வீட்டை மத்தவங்க எடுக்கலை"னு அழுறாங்க.பாவிங்களா.
குழந்தை பிறக்குறப்போ குழந்தை மட்டும் தான் அழணும். 60 வயசு பாட்டிய அழ வெக்குற நாம (நம்ம சமூகம்) உருப்புடுவோமா?

3) "இளையராஜாவை சங்கராச்சாரியார் தொட மறுத்தார்"னு செய்தி படிச்சேன். செய்தி உண்மையானு தெரியாது.
ஆனா கோவம் பொத்துகிட்டு வந்துச்சு. பல பேருக்கு அதே கோவம் வந்துருக்கும்.கோவத்த குறைச்சு அமைதிபடுத்துறதே அவரோட இசை தான். அவரையே அவமதிச்சு இருக்குறாங்க .
இலட்சக்கணக்கான மக்களை காயப்படுத்தி விட்டு , பூஜை செஞ்சா அந்த பாவத்தை போக்கிடலாம்னு வேதத்துல சொல்லி இருக்கா ?

"ஒரு பரதேசியால் ராஜாவை தொட முடியாது. பரதேசி கொடுத்து வெச்சது அவ்வுளவு தான் " னு twitterல ட்வீட் செய்தேன்.

"இளையராஜா வேற ஜாதி ,அதனால அவர் இசையை கேட்க மாட்டேன்"னு சொல்லி காதை மூடிக்கொள்வாங்களா ?
ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப்பட்ட 'நாயகன்' படத்துக்கு உயிர் கொடுத்ததே இளையராஜா தான் .

ஸ்ரீ ரங்கம் கோயில் தமிழ் நாட்டு பொக்கிஷம். அதே போல இசைஞானியும் தமிழ் நாட்டு பொக்கிஷம் . இந்த மாதிரி பொக்கிஷத்தை சேதப்படுத்துரவங்கள மனநல மருத்துவரிடம் தான் அனுப்ப வேண்டும் 

4) பிறக்கும் பொழுது, முதன் முதல் நாம பாக்குறது , நம்ம அம்மா முகம் கிடையாது.பிரசவம் பார்த்தவரின் முகம் தான்.
"நீங்க பிறந்த போது, பிரசவம் பார்த்தவர் யார் ? உதவி செஞ்ச செவிலியர் யார் ? அவர்கள் எந்த ஜாதி"னு தெரியுமா ? 
அவர் கீழ் ஜாதினு தெரியவந்தா, ஜாதி வெறி பிடிச்சவங்க என்ன செய்வாங்க ? அவங்க கண்ண அவங்களே நோண்டி எடுத்துடுவாங்களா ? 

# நம்ம நாடே ஒரு வளர்ந்து வருகிற நாடு தான் .அதாவது வளர்ந்த நாட்டினர் பார்வையில் , இந்தியர்கள் அத்துனை பேரும் கீழ் ஜாதியினர் தான் .

# ஒருவர் எந்த ஜாதி ? உசந்த ஜாதியா, தாழ்ந்த ஜாதியானு கண்டுபிடிக்க, உலகத்துல எந்த ஒரு ரத்த பரிசோதனையும் கிடையாது .

# போன தடவை உங்களுக்கோ, உங்க நெருங்கிய சொந்தத்துக்கோ அறுவை சிகிச்சை செய்த போது இரத்தம் ஏத்தி இருப்பாங்க. எந்த ஜாதி ரத்தம் ஏத்துனாங்க ? சொல்லுங்க பார்ப்போம்.  

# கவுண்டமணி ஒரு படத்துல சொல்லுவார்: "ரெண்டே ரெண்டு ஜாதி தான். ஒன்னு ஆண் ஜாதி,இன்னொன்னு பெண் ஜாதி ".
மருத்துவ ரீதியா இது ரெண்டு மட்டும் தான் .சிலருக்கு குறைபாடு இருக்கும்.அவ்வுளவு தான் .

நண்பர்கள் கிட்ட நான் சொல்வது: "நமக்கு ரெண்டு கை .ஒன்னு நாம வேலை செஞ்சு சாப்பிட.இன்னொன்னு அடுத்தவங்கள தூக்கி விட”. 


எல்லா ஜாதியினருக்கும் நோய் வரும். கஷ்டம் வரும். நாம தான் கை கொடுத்து தூக்கிவிடணும். கைக்கு கண்ணும் கிடையாது, 

ஜாதியும் தெரியாது. 

பொண்ணு கொடுக்க தான் ஜாதி பாக்குறீங்க. கை கொடுத்து தூக்கி விட கூட ஜாதி பார்க்கணுமா ?




கட்டில் பீரோவையும், கொஞ்சம் பாத்திரத்தையும் ஊர்லயிருந்து அப்பா எடுத்துட்டு வந்தார். பாத்திர மூட்டையில என் BP apparatus. எடுத்து பார்த்தா எல்லா mercuryயும் கீழ கொட்டியிருந்துச்சு. எனக்கு பயங்கர கோவம்.

(சத்தமா)"BP மெஷின யாரு பாத்திர பெட்டியில வெச்சது ?"
"தெரியல டா எப்படியோ வந்துடுச்சு. இத சரி பண்ண முடியுமா?"

"முடியாது."
"இது எவ்ளோ வில ?"

"ஆயிர ரூபா. 12 வருஷமா வெச்சுருக்கேன். எல்லாருக்கும் இதுல தான் BP பார்த்தேன்."
"ஓஓ....12 வருஷம் ஆயிடுச்சா ? நாங்கூட புதுசோனு நினைச்சுட்டேன்"னு சொல்லி சிரிக்கிறார்.



இன்னைக்கு ஸ்டூடண்ட்ஸ அழைச்சிகிட்டு கிராமத்துக்கு field visit.

வழக்கமான ஒன்னு தான்.
ஏன் இந்த field visit ? 

போன வருஷம் முதலாம் ஆண்டு மாணவர்களோட, Health Education வகுப்புல, "வயித்துப்போக்கால பாதிக்கப்பட்ட குழந்தைக்கு என்ன மாதிரி தண்ணி கொடுக்க சொல்லி அறிவுரை கொடுப்பீங்க"னு கேட்டேன். 

"மினரல் வாட்டர்"னு ஒருத்தன் பதில் சொன்னான். 

"இது தப்பு. வில அதிகம். வசதி இல்லாதவங்க மினரல் வாட்டர் வாங்க முடியாது. காய்ச்சுன தண்ணியே போதும்.அதிக செலவில்ல"னு சொல்லிக்கொடுத்தேன். 

நோயாளிகளோட குடும்ப சூழ்நிலைய மாணவர்களுக்கு புரியவெக்குறதுக்கு தான் இந்த field visit.

வீடு வீடா போய் நோயாளிகள கவனிக்கணும்.
"நோய்க்கு மட்டும் சிகிச்சை அளிக்கக் கூடாது. நோயாளிகளின் குடும்ப சூழ்நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும்"னு சொல்லித்தருகிறோம். 

அவங்க வீடு எப்படி இருக்கு, அடுப்படில புகை அதிகமா இருக்கா, காற்றோட்டம் சரியா இருக்கா, கழிவறை இருக்கா இல்லையா, அவங்க தொழில் என்ன, மாசவருமானம் எவ்ளோ, அவங்க குடும்பத்துல வேற யாராவது நோயாளிகள் இருக்காங்களா, குழந்தைங்க இருக்காங்களா, ஒழுங்கா தடுப்பூசி போடுறாங்களா, குடும்ப கட்டுப்பாடு முறைகள பயன்படுத்துறாங்களா, கர்ப்பமா இருக்குறவங்க நேரத்துக்கு ஆஸ்பத்திரிக்கு வராங்களா, வரலைன்ன ஏன் வரலைனு விசாரிக்கணும். நோயாளிகளுக்கு நிறைய அறிவுரைகள் கொடுப்போம். மருந்து தேவைப்பட்டா ஆஸ்பத்திரிக்கு அனுப்புவோம்.

வாரத்துக்கு ஒரு நாள்னு ஒரு வருஷம் அந்த கிராமத்துக்கு போகணும். வழக்கமா இது மாணவர்களுக்கு குஷியான வேலை. எனக்கும் தான். இன்னைக்கு மதியம் கொஞ்சம் வெயில் ஜாஸ்தி. தெரு தெருவா போனதுல களைப்பு. இந்த குடிச வீட்டுல ஒரு நிறை மாத கர்ப்பினி. பார்த்தாச்சு. பேசியாச்சு. அறிவுரை கொடுத்தாச்சு. கிளம்பணும்.

பசங்ககிட்ட, "வாங்க நேரமாவது, கிளம்பலாம்"னு சொன்னேன்.
எடத்துவிட்டு நகராம லேசா நெளிஞ்சாங்க.
ஒன்னும் புரியல. 

திரும்பவும் "வாங்க"னு சொன்னதும், "சார், எளனி சாப்ட்டுட்டு வறோம்"நு சொல்லி சிரிச்சாங்க. அப்ப தான் கவனிச்சேன், வீட்ல இருந்த 2 பேர் நிறைய தேங்கா பறிச்சு கொண்டுவந்துகிட்டிருந்தாங்க

"சரி சாப்டுட்டு வாங்க"னு சொல்லி, ஜூனியர்கிட்ட,"வாப்பா நாம கிளம்பலாம்"னு கூப்டதும்,"சார் நானும் எள்னி குடிச்சிட்டு வறேன். நீங்க போங்க"னு சொன்னார்.

வெயில். தாகம். களைப்பு.
எள்னி வேற ரொம்ப எளசா இருந்திச்சு.
சீவ ஆரம்பிச்சதும் வாசம் கிளம்புச்சு. என்ன செய்றதுனு தெரியல.

ஜூனியர் பையனோ,"நீங்க போங்க சார்"னு திரும்பவும் சொன்னான். துரோகி. நீ மட்டும் குடிப்பியாடானு மனசுக்குள்ள கடிச்சுகிட்டேன். 

நல்ல வேள, அந்த வீட்டுக்காரங்களே எனக்கு ஒன்னு நீட்டுனாங்க. அவங்க நல்ல மனசு கஷ்டப்படுமேங்குற ஒர்ர்ரே காரணத்துக்காக வாங்கி குடிச்சேன். ஆனா, இந்த ஜூனியர் நான் குடிக்குறத போட்டோ எடுத்தான். சரி போகட்டும்னு விட்டுட்டேன். 

கொஞ்ச நேரத்துல எள்னிய வெட்டி உள்ள இருக்குறத ரசிச்சு ரசிச்சு சாப்ட்டேன்.

2 நிமிஷத்துல, ஜூனியர் செல்போன காட்டுனான். பாவி. எல்லாத்தையும் போட்டோ எடுத்து Whatsappல Upload பண்ணியிருக்கான். 

பஸ்ஸுல ஏறி உக்காந்ததும், எல்லார்கிட்டயும் காட்டுனார். சரி போகட்டும்னு விட்டேன்.
5 நிமிஷத்துல, Whatsappல வரிசையா கமெண்ட்ஸ் வர ஆரம்பிச்சுடுச்சு.
"இதுக்கு தான் நீங்க கிராமத்துக்கு போறீங்களா சார்?"
காலேஜ்ஜுக்கு திரும்பி வந்ததும், ஒரு ஜூனியர், "சார் நீங்க மட்டும் போய் எள்னி குடிக்குறீங்க, அடுத்த வாரம் நானும் வரேன்

 — feeling ஒரு எள்னி குடிச்சது குத்தமாயா ?





இன்றோடு 8 மாச தாயல்பூர் பணி முடிஞ்சுது..

இன்னைக்கு காலை,
வழக்கம் போல பரபரப்பு..
opd….புதுசா சேர்ந்த பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் வந்தாங்க. அவங்களுக்கு orientation வகுப்பு எடுத்து, கிராமப்புற பணியோட முக்கியத்துவத்த விளக்குனேன். 

மதியம் 1 மணி இருக்கும்.
சீனியர், 'seminar hallகு வா'னு கூப்பிட்டார்.
'எவ்ளோ வேல இருக்கு . இப்ப எதுக்கு என்ன அங்க கூப்பிடுறார்?' புரியாம குழம்பினேன்.

ஊழியர்களும் மாறி மாறி வந்து, 'வாங்க சார்'னு கூப்பிட்டாங்க.
குழப்பமா மாடிக்கு போன எனக்கு இன்ப அதிர்ச்சி.
கிட்டத்தட்ட 25 சுகாதார ஊழியர்கள்,மருத்துவமனை ஊழியர்கள்.
என்னை வரவேற்றாங்க.

ஓ ஓ புரிஞ்சிடுச்சு.
எனக்கு send off party கொடுக்க கூடியிருக்கிறார்கள்.
எனக்கே தெரியாம ரகசிய mission.
இதுக்கு தான் காலையில இருந்து கிசுகிசுத்துக்கிட்டே இருந்தாங்களா ?

சீனியர் :"பாலாஜி இன்னைக்கோட duty முடிக்கிறார்.அவர பத்தி என்ன சொல்லனும்னு நினைக்குறீங்களோ சொல்லுங்கனு சொன்னார்"

எல்லாரும் சிரிச்சாங்க.
பயங்கர சந்தோஷத்துல இருந்தாங்க.

நான்: " நான் போறதுல எல்லாருக்கும் இவ்ளோ சந்தோஷமா?"னு கேட்டேன். உடனே சத்தமா "இல்ல இல்ல சார்"னு பதில்..
நான் : "நான் தான் உங்க எல்லார் மேலயும் கோவப்பட்டுருக்கேனே.திட்டுவேனே"
ஒரே சிரிப்பு...

ஒவ்வொருத்தறா எழுந்து என்ன பத்தி பாராட்ட ஆரம்பிச்சுட்டாங்க.

"உங்க கிட்ட தான் சார் தையல் போட கத்துக்கிட்டேன்.", " டெலிவரி கத்துகிட்டேன் ", "நீங்க சொல்லித்தர விதம் அச்சா சார் " , "நீங்க கோவப்பட்டதுனால தான் சார் நான் கத்துகிட்டேன்.

பாராட்டுனதுல என்னால சிரிப்ப அடக்கவே முடியல.
"பேஷண்ட்டுக்காக தான் சார் நீங்க கோவப்பட்டீங்க.",
"திரும்பவும் இங்க வாங்க சார்" ,"நீங்களே மருத்துவ அதிகாரியா வாங்க சார் "

இது வரைக்கும் என்னை யாருமே இப்படி பாராட்டுனதில்ல.
அதுவும் மொழி தெரியாத ஹரியானா கிராமத்துல , வயசுல பெரியவங்க எல்லாரும் பாரட்டுனாங்க.

சீனியர் ( மருத்துவ அதிகாரி ) : " போன வருஷம் நம்ம பகுதி infant mortality rate(imr) 41 (imr- ஒரு வயதுக்குட்பட்ட 1000 குழந்தைங்ககளில் எத்தனை குழந்தைங்க
இறக்குறது) . இந்த வருஷம் imr 31 ஆ குறைஞ்சுடுச்சு..
இந்த சாதனைக்கு பல காரணம் .
முக்கிய காரணம் பாலாஜி.
எல்லாரும் கை தட்டுனாங்க.
நான் : "சார்…இல்ல சார் "
சீனியர் (என்ன பார்த்து): " நான் பேசுவேன்.நீ குறுக்க பேசக்கூடாது.நான் சீனியர். நீ பேசாத".
"போன வருஷம் இருந்ததோட இந்த வருஷம் நம்ம மருத்துவமனை பிரசவங்களோட எண்ணிக்கை 2 மடங்காயிடுச்சு."
"மலேரியா பரவுனப்போ, நானே பயந்துட்டேன். பாலாஜி இல்லைனா ஏதாவது நடந்திருக்கும். "
"நான் சீனியர்…ஆனா பாலாஜிகிட்டா நான் நிறைய கத்துகிட்டேன்."

ஒரே பாராட்டு மழை.
ஹரியான்வியில வேற பாராட்டுனாங்க. மொழி புரியாட்டியும் ஏதோ பாராட்டுறாங்கனு மட்டும் புரிஞ்சுது.


என்னை பேச சொன்னாங்க .
15 நிமிஷம் பேசுனேன். ஹிந்தியில….முடிஞ்ச அளவு ஹிந்திய கொலை செஞ்சேன்.
நான் : "வணக்கம்…… வந்த முதல் நாளே ஆட்டோ கவிழ்ந்து 10 பேர் அடிபட்டு வந்தாங்க. செவிலயர் நிறைய தவறு செஞ்சார். கோவப்பட்டு கத்தினேன்… 'கோவப்படுறதால பயன் இல்ல. சொல்லிக்கொடு'னு சீனியர் தான் புரிய வைத்தார்.
தினமும் பாடம் எடுத்தேன்…..எல்லாரையும் வேல வாங்கனேன்……ராத்திரி 2 மணி வரைக்கும் முழிச்சிருப்பேன்….யாராவது பணி நேரத்துல தூங்குனா எழுப்பி வேலை செய்ய சொல்வேன்…...நோயாளி ராத்திரி வரப்போ யாரும் தூங்கக்கூடாதில்ல ...…சீனியர் பாராட்டுன சாதனை எதுவுமே எனதில்லை.மொத்த தாயல்பூர் மருத்துவமனைக்கே சொந்தம்…மொத்த மருத்துவமனையும் முன்னேறிடுச்சு…..காவலாளி முதல் மருத்துவர் வரை சரியா வேலை செய்யுறாங்க.. யாரும் நோயாளிகிட்ட கோவப்படாதீங்க….அவங்க படிப்பறிவில்லாதவங்க, புரியாம பேசுனா அமைதியா புரிய வைங்க. …. இந்த மருத்துவமனை, பல வருஷமா கட்டுன ஒரு கண்ணாடி வீடு மாதிரி…இங்க ஒரு குழந்தை இறந்தாலும், கண்ணாடி வீட்டு மேல கல்லெறிவது மாதிரி. அந்த வீட்ட திரும்ப கட்டுறது நடக்காத காரியம். மக்கள்கிட்ட நம்ம மேல நம்பிக்கை போயிடும். திரும்ப நம்ம கிட்ட வரமாட்டாங்க. …… எனக்கு கடவுள் நம்பிக்கை அவ்வுளவா கிடையாது…ஆனா யாரோ நம்மல சேட்டிலை மாதிரி மேல இருந்து பாத்துக்கிட்டே இருக்குற மாதிரி நான் நினைச்சுக்குவேன்…தப்பு செஞ்சா அவர் உடனே நம்மல தண்டிச்சுடுவார்….வேல செய்யாம வெளிய போனா,நமக்கு வாகன விபத்து நடக்கலாம்…..சரியா வேலை செய்வோம்…உங்க உறவினர்கள் அத்தன பேருக்கும் நான் தான் மருத்துவம் பாக்கணும்னு என் கிட்ட கூட்டிகிட்டு வருவீங்க ….அதே அக்கறை நம்மகிட்ட வர நோயாளிகள்கிட்டயும் காட்டுங்க……நன்றி"

எல்லாரும் வாழ்த்துனாங்க..
எப்படி வாழ்த்துனாங்க?
பாலாஜி md pass பண்ணனும்னு வாழ்த்துனாங்களா ?
இல்லவே இல்ல.

"மனசார சொல்றோம் சார்.உங்களுக்கு எல்லாம் கிடைக்கணும்"
"சீக்கிரம் கல்யாணம் நடக்கணும்"
"உங்களுக்கு தகுந்த மனைவி அமையணும்"
" நிறைய குழந்த பிறக்கணும் "
இதெல்லாம் நான் கேட்டனா ?
"ரிங் செரிமனிக்கு கூப்பிடுங்க சார்."
"இன்விடேஷன் அனுப்புங்க சார்.கண்டிப்பா வறோம்"

பொண்ணு என்ன கையிலயா வெச்சிருக்கேன் ?

"ஹரியானா பொண்ணு பார்க்கலாமா சார் ?"
ஹை. ஹை ...இப்போ தான் விஷயத்துக்கே வந்திருக்காங்க....அடுத்து என்ன சொல்லப்போறாங்கனு ஆவலா இருந்தேன்.
உடனே சீனியர், "ஹரியானா பொண்ணு வேணாம்.சரி வராது.மொழி புரியாது..."னு சப்புனு விளக்க அமுக்கிட்டார்.
ச்ச.

ராத்திரி என் கூட படிக்கிற எல்லா கிராமத்து md மருத்துவர்களுக்கும் விருந்து கொடுத்தேன்.

ஒரு சீனியர் சொன்னார் : "எய்ம்ஸ்ஸோட நம்ம டிபார்ட்மெண்ட் வரலாற்றிலேயே ஒரு md மாணவருக்கு, கிராமத்து மருத்துவ ஊழியர்களே வழி அனுப்பு விழா நடத்துனது, முதல் முறையா உனக்கு மட்டும் தான் பாலாஜி. good .congrats"

சந்தோஷமா இருக்கு.
ஆனா நாளைக்கே இத பிரிஞ்சு டெல்லி போகணுமே…
bye bye dayalpur.

- பாலாஜி



சமீப காலமாக மக்கள் மத்தியில் 2 விஷயம் பரவலாக பேசப்படுகிறது :- 
1) ஃபேஸ்புக் ஒரு வெட்டி பொழுதுபோக்கு. இதுனால பிரச்சனை தான் அதிகம்.
2) தமிழ்நாடுல இருக்குற கட்சிகளால மக்களுக்கு எந்த பிரோஜனமும் இல்ல.

இந்த கருத்துக்கள் எந்தளவிற்கு உண்மை ?


நேத்து ராத்திரி 12.50 க்கு ஃபேஸ்புக்கில் இருந்தேன்.
மருத்துவர்.Mariano Anto Bruno Mascarenhasஅவர்களிடம் இருந்து இன்பாக்ஸ்கு ஒரு செய்தி வந்தது:-
"அவசர உதவி தேவை. உத்ராகண்ட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் டெல்லியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறது. டெல்லியில் தமிழக மருத்துவர்கள் யாராவது இருக்கிறார்களா? உடனே தெரியப்படுத்தவும்".
(ஃபேஸ்புக்கில் உள்ள பலருக்கு இந்த செய்தி கிடைத்திருக்கும்.)

மருத்துவர். ப்ரூனோ அவர்களை ஃபேஸ்புக் மூலம் மட்டுமே அறிவேன். அவரிடம் பேசியதில்லை, பழகியதில்லை. ஆனால், அவரது ஃபேஸ்புக் பதிவுகளை படித்ததன் மூலம் அவர் மீது பெரிய மதிப்பு வைத்திருந்தேன். என் செல்ஃபோன் நம்பரை உடனே அவருக்கு அனுப்பினேன். அடுத்த நொடி செல்ஃபோனில் பேசினார்.

மருத்துவர்.ப்ரூனோ : தமிழக மருத்துவ டீம் காலை ஃப்ளைட்டில் சென்னையிலயிருந்து கிளம்பி மதியத்துக்குள் டெல்லி வந்திருவாங்க. அதுவரைக்கும் நீங்க கொஞ்சம் பாத்துக்கோங்க சார்.

நான் : சார், இப்ப டெல்லியில தான் இருக்கிறேன். நான் பாத்துகுறேன் சார். கவல படாதீங்க.


"பாலாஜி என்கிற தமிழக டாக்டர் campக்கு போகிறார்" என்ற தகவலை ப்ரூனோ சார் தமிழக சுகதாரத்துறை உயர் அதிகாரிக்கு (Addl. Director Dept.Public Health) தெரியப்படுத்திவிட்டு, மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் ஃபோன் நம்பரை எனக்கு அனுப்பி வைத்தார். காலை 1.10 க்கு தமிழ்நாடு இல்லத்திற்கு தொடர்பு கொண்டேன். எடுத்த எடுப்பிலேயே,"சார் சொல்லுங்க. இப்ப தான் தமிழ்நாட்டுலயிருந்து (மேலதிகாரி) பேசினாங்க. இங்க தங்கியிருக்குறவங்களுக்கு ஹிந்தி தெரியல, டெல்லி டாக்டர்ஸுக்கு தமிழ் தெரியல.பிரச்சனையா இருக்கு சார். நீங்க வாங்க"னு சொன்னாங்க.


# தங்கவைக்கப்பட்டிருந்த தமிழர்கள் அனைவரும் ஹரித்வாருக்கு யாத்திரையாக சென்றவர்கள். அனைவருக்கும் வயது 50+. தமிழ் மட்டுமே தெரிந்த நம் வீட்டு பாட்டி தாத்தா மாதிரி தான் இருந்தாங்க. பெரும்பான்மையானவர்களுக்கு ரத்த அழுத்தம், சக்கிரை வியாதி, இதய தொந்தரவு இருந்தது. நான் அவர்கள பரிசோதிச்சேன். யாருமே emergency நோயாளிகள் கிடையாது. சின்ன சின்ன தொந்தரவு தான். ஆனா எல்லோருக்கும் பயம். உயிர் தப்பி வந்த பயம். ஒவ்வொருத்தர்கிட்டயும் 5,10 நிமிஷம் பொறுமையா பேசினேன். மருந்து எழுதி கொடுத்தேன். எல்லாரும் ஓரளவு அமைதியடைஞ்சாங்க. தமிழக மருத்துவ குழு வந்தடைந்தாங்க. தேவைப்படுற மருந்துகள அவங்களே ஃப்ளைட்ல கொண்டு வந்திருந்தாங்க. பி.பி அப்பரட்டஸ் மட்டும் விமானத்துல எடுத்து வர அனுமதி கிடையாதுங்குறதால, எய்ம்ஸ் அழைச்சிட்டு போய் தனியார் ஸ்டோரில் வாங்கிக்கொடுத்தேன். எல்லா செலவும் தமிழக அரசுடையது.


இந்த பதிவின் மூலம் நான் சொல்ல வருவது 3 கருத்துக்கள் :-

1) மருத்துவர்.ப்ரூனோ அவர்களை நான் இதுவரை பார்த்ததில்லை. நேற்று இரவு வரை என் ஃபோன் நம்பர் கூட அவரிடம் கிடையாது. ஆனால் அவர் செய்தி அனுப்பியதற்கும்,எங்கோ டெல்லியில் உள்ள நான், தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு ஃபோன் மூலம் தொடர்பு கொண்டு பேசியதற்கும் சரியாக 20 நிமிடம் மட்டுமே இடைவெளி. அதுவும் உலகம் உறங்கிக்கொண்டிருக்கும் இரவு 1 மணிக்கு !

இது எப்படி சாத்திமானது ?
பதில் :- " ஃபேஸ்புக் "

இந்த ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் ரொம்ப சக்தி வாய்ந்தது. சரியாய் பயன்படுத்தினால் மனிதயினம் முன்னேற பெரும் உதவியாய் இருக்கும். ஆனா இது ஒரு Double edged weapon. இதனை பலர் தவறாய் பயன்படுத்தி தவறு இழைப்பதும், பயன்படுத்த தெரியாமல் வீணடிப்பதும் தான் வேதனையா இருக்கு .


2) தொலைதொடர்பு வளர்ச்சி
*************************
18 வருஷம் முன் தேசிய அளவிலான ட்டோர்னமெண்ட் ஒன்றிற்காக தமிழ்நாட்டில் இருந்து மைசூர் போனோம். திடீர் கலவரம். இரவு நேரம். அப்ப ஃபோன் வசதி கிடையாது. நாங்க போன குழு தனித்தனியா பிரிஞ்சு ஓடினோம். 5 பேர் மட்டும் ஒரு கல்யாண மண்டபத்தின் சமையல் அறையில் ராத்திரி முழுக்க இருட்டில் தங்கினோம். அடுத்த நாள், நாங்கள் தங்கியிருந்த லாட்ஜுக்கு வந்ததும் தான் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். நெய்வேலியில் இருந்த பெற்றோர்கள், குழந்தைகளை மைசூருக்கு அனுப்பிவெச்சுட்டு பயந்து போயிருந்தாங்க. எங்களை பற்றிய எந்த வித செய்தியும் அவங்களுக்கு தெரியவில்லை.
காரணம் ? அன்றைய காலகட்டத்தில் தூர்தர்ஷன் மட்டுமே. அதுவும் ஊரில் சிலர் வீட்டுல மட்டுமே தொலைகாட்சி இருக்கும்.
ஆனா, இப்ப நடந்திருக்கும் உத்திராகண்ட் வெள்ள பாதிப்பு பற்றி, எல்லா செய்தி ஊடகங்களும் நிமிஷத்துக்கு நிமிஷம் செய்தி வெளியிடுது. ஹெலிகாப்டரில் போய் செய்தி சேகரிக்குறாங்க. பாதிக்கப்பட்ட உறவினர்களை பற்றி தெரிந்து கொள்ள Helpline கொடுத்திருக்காங்க. இந்த தொலைதொடர்பு வளர்ச்சியை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம்.


3) பெருமை கொள்ள வைக்கும் தமிழகம்
********************************
"உத்திராகண்டில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களை, பத்திரமாக அழைத்து வர தமிழக அரசு உடனடியா நடவடிக்கை எடுக்க வேண்டும்" என திமுக உட்பட பல அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தன. தமிழக முதல்வர் உடனடியா செயல்பட்டு அத்துனை உதவியையும் செய்துள்ளார்.

கடந்த 15 ஆண்டுகளாக, எதிர்கட்சியை சேர்ந்த தொலைகாட்சிகளில், மக்களின் குறைகளை எடுத்துச் சொல்கிறார்கள். ஆள்பவர்களுக்கு அதை சரி செய்தாக வேண்டிய காட்டாயம். தமிழக அரசியல் கட்சிகளிடையே உள்ள இந்த ஆரோக்கியமான அரசியலை பாராட்டத்தான் வேண்டும். ஹரியானா, மத்திய பிரதேசம் போன்ற வடமாநிலங்களில் மக்கள் பிரச்சனையை 2 கட்சிகளுமே கண்டுகொள்ளாது.

தமிழ்நாடு பவனில் தங்கியிருந்த தமிழக மக்கள், மனநிறைவு அடைஞ்சு சந்தோஷமாய் தமிழக மருத்துவர்களையும் தமிழக அரசையும் பாராட்டினாங்க. வந்திருந்த அத்தனை தமிழர்களுக்கும் இலவசமா அறை ஒதுக்கி, உணவு அளித்து, மருத்துவ வசதியையும் செய்து கொடுத்து, இலவசமா விமானத்தில் தமிழகம் அழைத்து போகிறது தமிழக அரசு. இது சிலருக்கு சாதாரண விஷயமா தெரியலாம். ஆனா, ஒரிசா, பீகார் மருத்துவ நண்பர்கள் இத கேட்டதும்," உங்க கவர்ன்மெண்ட் இவ்ளோ செஞ்சு கொடுத்திருக்கு. எங்க ஸ்டேட்லயிருந்து எத்தன பேர் போனாங்கனு கூட யாருக்கும் தெரியாது. யூ ஆர் லக்கி பீப்பிள்"னு தமிழ்நாட்ட பாத்து பொறாமையா பேசுனாங்க. உண்மை தான்.

இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களையும் ஒப்பிடுகையில் தமிழக மருத்துவத்துறை மிகச்சிறப்பாக செயல்படுகிறது. பெரும்பாலான health indicatorகளில் தமிழகம் முதலிடத்தில் இருக்கும் (சிலவற்றில் கேரளாவிற்கு அடுத்தபடியாக).
இந்த பெருமைக்கு யார் காரணம் ?
தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் சுகாதாரத்துறைக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். தமிழக மக்களின் படிப்பறிவு, விழிப்புணர்வு. "தமிழ் நாட்டு மருத்துவர்களுக்கு தான் அதிக பொறுப்புணர்வு இருக்கு" என்பது எய்ம்ஸில் உள்ள பல்வேறு துறைகளிலும் உள்ள துறைத்தலைவர்களின் கருத்து.

தமிழ்நாடு இல்லத்தின் வாசலில் உள்ள இந்த தமிழக அரசு முத்திரையை ஃபோட்டோ எடுத்தேன். அதில் உள்ள 4 தலை சிங்கத்தை பல இடங்களில் பார்த்துள்ளேன். ஆனா அதில் உள்ள கோபுரத்தை இன்று பார்த்ததும் ஏதோ ஒரு ஈர்ப்பு, சந்தோஷம்,பெருமை.
தமிழ்நாட்டை சேர்ந்தவன் என்ற பெருமை.

பாலாஜி.






- posts in kungumam magazine



poster by பாலாஜி




குழந்தைய தொட்டில்ல போட்டு ஆட்டினா, நிம்மதியா தூங்கிடுது.
இதுவே நமக்கு நடந்தா தலை சுத்துது.
அவசரபட்டு வேகமா வளர்ந்துட்டோமோ ? 

பொண்ணுங்க,குழந்தைங்கள பார்த்து, 'ச்சோ ச்வீட்',' ச்சோ க்யூட்'னு கொஞ்சுறாங்க.
நாம குழந்தையா இருந்தப்போ இப்படி தான் கொஞ்சி இருப்பாங்களோ ?
ச்ச ..அவசரபட்டு வேகமா வளர்ந்துட்டேனோ ?

அப்போ, நாட்டு வெடிய பத்தவெச்சுட்டு ஸ்டைலா நடந்து வருவேன்.
இப்போ,ஊசி வெடிய பத்தவெச்சுட்டு பயந்து ஓடிவறேன்.
அவசரபட்டு வேகமா வளர்ந்துட்டேனோ ?

அப்போ, ஒண்ணுமே இல்லாத மேடை நாடகத்த கைதட்டி ரசிச்சேன்.
இப்போ,ஆஸ்கார் விருது வாங்குன படத்த, ரசிக்கத் தெரியாம விமர்சிக்குறேன்.
அவசரபட்டு வேகமா வளர்ந்துட்டேனோ ?

அப்போ டிவில, மகாபாரத சண்டையை, சிரிச்சு ரசிச்சு பார்த்தேன்.
இப்போ போரை பத்தி, செய்தி கேட்டாலே வருத்தமா இருக்கு.
அவசரபட்டு வேகமா வளர்ந்துட்டேனோ ?
அதிக விலை கேமரா வெச்சிருப்பவர் தான் ஃபோட்டோ கிராபராம் ! 
அப்போ பெரிய பிரிண்டிங்க் பிரஸ் வெச்சிருப்பவர் தான் எழுத்தாளரா ?






இன்று சென்னை-டெல்லி, இனிமையான விமான பயணம்.
*****************************************************

1) டெல்லி ஃளைட்டுக்குள்ள ஏறுனதும்,"ஒரு வேள இது பிரிட்டீஷ் ஏர்வேஸா இருக்குமோ ?"னு ஒரு சந்தேகம். 
ஆமா பின்ன எல்லாரும் இங்கிலீசுல தான பேசுறாங்க. 
60 வயசு தமிழ்நாட்டு மாமா ," can i get an english newspaper"னு பணிப்பெண்கிட்ட பீட்டர் விட்டார்.  
டீ ஷர்ட் போட்ட தமிழ்நாட்டு அக்கா, தன்னோட 6 வயசு பொண்ணுகிட்ட இங்கிலீஷ்லயே அதட்டி உதார்விட்டுகிட்டு இருந்தாங்க.

"ஃப்ளைட் கிளம்ப போகுது. போனை ஸ்விட்ச் ஆஃப் செய்யங்க"னு அறிவிச்சதும் ,எல்லா இங்கிலீஷ் துரைகளோட சாயமும் வெளுத்துடுச்சு: "நான் ஃப்ளைட்ல ஏறிட்டேன் மா", "பாப்பாவ பத்திரமா பாத்துக்கோங்க" , " அம்மு நான் வரட்டா" " ம் கிளம்பிட்டேன் " "டாடிக்கு பை பை சொல்லு"- ஆஹா….இந்த இங்கிலீஷ் நடிகர்கள், வீட்டுக்கு ஃபோன்ல பேசுறப்போ மட்டுமாவது தமிழ்ல பேசுறாங்களே.

2) கரும்பு சாறு தான் இனிப்பா ?
கிடையவே கிடையாது.
ஸ்கர்ட் போட்ட பணிப்பெண்கள் சிரிச்சுகிட்டே , புரியாத பாஷையில கொஞ்சி கொஞ்சி பேசுறது தான் இனிப்பு.



3) " apple laptop யூஸ் பண்றீங்க. இப்படி இண்டீசெண்டா பொட்டலத்துல சாப்பாடு கொண்டு வந்துருக்கீங்களே?"னு பக்கத்தில் இருந்த ஒரு தமிழர் இங்கிலீஷில் என்கிட்ட நக்கல் கேள்வி கேட்டார்.

எனக்கு பயங்கர கோவம்.
"எங்க தோட்டத்து எழுமிச்சை பழத்த வெச்சு, என் பாட்டி செஞ்ச சாப்பாடு இது. எனக்கு என்ன பிடிக்கும் எவ்ளோ சாப்பிடுவேனு அவங்களுக்கு தான் தெரியும். இத எங்க வீட்டு வாழையிலையில வெச்சு ஆசையா கட்டி கொடுத்தது என் அப்பா. இத சாப்பிடுறதுல என்ன indecency இருக்கு ?  

இந்த ஃப்ளைட்ல கொடுக்குற காஞ்சு போன பிரியானிய செஞ்சது யார் தெரியுமா ? 
எப்பொ செஞ்சாங்க தெரியுமா ? 
சில்வர் ஃபாயில்ல சுத்தி கொடுத்தா சுத்தமானதா ? ஃளைட்டுக்குள்ள இவங்க ரீஹீட் பண்ணி தர சாப்பாடால என்ன நோய் வரும் தெரியுமா?"னு விடாம பதில் கேள்வி கேட்டேன்.
நக்கல் கேள்வி கேட்ட சக பயணி பதில் ஏதும் சொல்ல முடியல.
laptop உபயோகிச்சாலும் சாப்பாட கையால எடுத்து வாய் வழியா தான சாப்பிட முடியும் ?

4) பணிப்பெண் : மேடம் குழந்தைய அவன் சீட்டுல உட்கார வெச்சு பெல்ட்டு போட்டு விடுங்க."
பயணி : இவன என் மடிய விட்டு இறக்குனா அழறான் . மடியில வெச்சு நான் பாத்துக்குறேன் .

பணிப்பெண் : மேடம், ப்ளீஸ் கோஆபரேட் பண்ணுங்க. இப்போ 15 ஆயிரம் அடி உயரத்துல பறக்குறோம். கொஞ்ச நேரத்துல லேண்டிங் . அவசியம் குழந்தைக்கு பெல்ட்டு போடணும்.

சரினு அந்த அம்மா , ரெண்டர வயசு வால் பையன, பக்கத்து சீட்டுல உக்கார வெக்குறாங்க.
வீல்ல்ல்ல்னு சத்தம்.
பையன் அலாரம் அடிச்ச மாதிரி அழுதான்.
பணிப்பெண் காத மூடிகிட்டார்.
எல்லா பயணிகளும் திரும்பி பாக்குறாங்க.

பணிப்பெண் : ஓகே ஒகே மேடம் . குழந்தைய மடியிலேயே வெச்சுக்கோங்க.

பணிப்பெண் ஒரு ரெண்டர கிட்ட பணிஞ்சிட்டார்.
அது ! யார் கிட்ட ? நடக்குமா ?
யசோதையாலேயே வால் பையன அடக்க முடியலையாம். நீங்கள்லாம் எம்மாத்திரம்?


5) ஒரு 80 வயது முதியவருக்கு அவசரமா பாத்ரூம் போகணும். கதவ தட்டினார். தள்ளினார்.
"உள்ள இன்னொருவர் இருக்கிறார், கொஞ்சம் பொறுங்க"னு பணிப்பெண் சொன்னது கூட அவரால் புரிஞ்சிக்க முடியல.
எல்லாருக்கும் சிரிப்பு.

6) அருகில் 55 வயது மருத்துவர் .என்னைப் பற்றியும் என் ஃபோனை பற்றியும் விசாரித்தார். திடீர்னு "உனக்கு எப்போ கல்யாணம்?"னு கேட்டுவிட்டார் .
எனக்கு ஆச்சர்யம் .


"எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலைனு எப்படி சார் கண்டுபிடிச்சீங்க?”
"உங்க ஃபோன்ல உங்க ஃபோட்டோவ ஸ்கிரீன் ஸேவரா வெச்சுருக்கீங்க.கல்யாணம் ஆகியிருந்தா மனைவி போட்டோவ தான் வெச்சிருப்பீங்க.வெச்சே ஆகணும்.இல்லைனா நடக்குறதே வேற." 
அடா அடா அடா. என்ன ஒரு தத்துவம் ? எல்லாம் அனுபவம்.

7) ஃப்ளைட் தரை இறங்குது.
ஷ்ஷ் ஆஆ னு மெல்லிய சத்தம்.
திரும்பி பார்த்தேன்.
30 வயசு பெண் , பயத்துல கண்ண இறுக்கமா மூடிகிட்டு, தன் கணவர் கைய அழுத்தமா பிடித்திருக்கிறார்.
ஏதாவது அசம்பாவிதம்னா ரெண்டு பேரும் தான மேல போய் சேரணும்? கணவரால் மனைவிய எப்படி காப்பாத்த முடியும் ?
இதுல அறிவுக்கு வேலையே இல்ல. காப்பாத்த முடியாது தான்.
ஆனா துணைகிட்ட மட்டுமே கிடைக்கும் பாதுகாப்பு . நம்பிக்கை உணர்வு.
சீக்கிரம் என் கையையும் யாராவது பிடிப்பாங்க.

8) இறங்குறப்போ , பைலட் எல்லாருக்கும் நன்றி தெரிவித்தார்.
பயணிகளும், "ஸ்மூத் லேண்டிங். தேங்க்யூ"னு அவருக்கு நன்றி தெரிவிச்சாங்க.
எத்தன தடவ நாம பேருந்து, ரயில்கள்ல பயணிச்சிருப்போம்.
பத்திரமா நம்மல கொண்டு சேர்த்த அந்த ஓட்டுனர்களுக்கு நாம் நன்றி தெரிவிச்சிருப்போமா ?


9) ஆண்களுக்கு , பெண்களுக்கு , நடக்க முடியாதவர்களுக்குனு 3 வித கழிப்பறை. அட. இது போல பேருந்து நிறுத்தங்கள்லயும் நடக்க முடியாதவர்களுக்கு தனி கழிப்பறை வெக்கலாமே ?

நடக்க முடியாதவர்களுக்கு தனியே சக்கர நாற்காலி. அவர்களை அதில் அமர்த்தி விமானம் வரை அழைத்து வர அன்பான பணியாட்கள். நம்ம ஊர் பேருந்து படிகட்டுகளில் இவர்களால் எப்படி ஏற முடியும் ?

'ஒரு நாள் நமக்கும் வயதாகும்'னு நினைப்பிருந்தால், வயதானவர்களுக்கும் ஏற்ற மாதிரி பேருந்துகளை வடிவமைத்திருப்பார்கள்…

10) ஒரு 70 வயசு பாட்டி, வேகமா பெல்ட்டில் வந்த பெரிய பயண பைய இறக்க முடியாம சிரமபட்டார்.
நான் இறக்கி கொடுத்ததும் , "நன்றி தம்பி"னு என் தலையியில கை வெச்சு வாழ்த்துனாங்க.
இருந்தாலும் அந்த 70 வயசு பாட்டிக்கு நான் தம்பியா ?

வெளிய வரப்போ, ஒரு தம்பதி ட்ராலியில பயண மூட்டைகள வெச்சு, அது மேல 2 குட்டி குழந்தைகள உட்கார வெச்சு, தள்ளிகிட்டே வந்தாங்க. விளையாடிக்கிட்டே வந்த அந்த 2 பொடிசுகளும், என்னய பாத்து சிரிச்சுகிட்டே "பை அங்கிள்"னு சொன்னதுடன் சந்தோஷமான பயணம் முடிவுக்கு வந்து..

- பாலாஜி.

அவளுக்கும் வலித்தது

கைக்குழந்தையுடன் அவள்.
"உன் பெயரை தான் வைத்திருக்கிறேன்" என்றாள்.
"இனிஷியல் எனதில்லையே"

"மறக்க முடியவில்லை" என்றாள்.
“வேண்டாம். அவனையும் ஏமாற்றாதே"

குழந்தைக்கு முத்தமிட்டு கிளம்பினேன்.
அவளுக்கும் வலித்தது.


"மனிதக்குரங்கின் மூளையை நீக்கி விட்டால், அதனால் உயிர் வாழ முடியுமா? " என்பதை அறிய, 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க-சீன விஞ்ஞானிகள், கூட்டு ஆராய்ச்சி ஒன்று நடத்தினார்கள். 

மூளையை எடுத்தவுடன், குரங்கை காட்டில் கொண்டு போய் விட்டுவிட்டார்கள். ஆனால் சில நாட்களில் அது எங்கோ காணாமல் போய்விட்டது. 

"ஆபத்தான அந்த விலங்கினால் பொது மக்களுக்கு ஏதும் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ?" என்று ஆராய்ச்சியாளர்கள் மிகுந்த கவலையில் இருந்தனர். ஆராய்ச்சியும் முடிவு தெரியாமல் மூடப்பட்டது. 

இன்று தான் அவர்களுக்கு செய்தி கிடைத்தது :
" SUCCESS. அதை கண்டுபிடித்துவிட்டோம் . ஆசிய கண்டத்தில் உலவுகிறது. இந்தியாவில் அதை சுப்ரமணிய சுவாமி என்றழைக்கிறார்கள்".
முதலாமாண்டு எம்பிபிஎஸ் இறுதி தேர்வு. 
அனாடமி ப்ராக்டிகல். 


எக்ஸ்டர்னல் மற்றும் இண்டர்னல் மருத்துவர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். 
ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியாக வைவா.
"என்ன கேள்வி கேட்பார்களோ ?"னு அனைவருக்கும் படபடப்பு.

ஒரு மாணவன் உள்ளே நுழைகிறார்.
கை எலும்புகள்,கால் எலும்புகள் என மேஜை முழுதும் எலும்புகள் பரப்பி வைக்கப்பட்டிருந்தது.

எக்ஸ்டர்னல் (தன் கையை நீட்டி) : ஏதாவது ஒன்றை எடு.

சந்தோஷமான மாணவர் ,'தேங்க்யூ'னு சொல்லிவிட்டு ,சற்றும் தாமதிக்காமல் , அங்கிருந்த பிஸ்கட் பாக்கெட்டை எடுத்து பிரித்து, சாப்பிட ஆரம்பிக்கிறார்.
எக்ஸ்டர்னலுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
அதிர்ச்சியான இண்டர்னல் , கோவத்த வெளிக்காட்டிக்காம "தண்ணி வேணுமா?" னு கேட்க, 'வேண்டாம்'னு தலையசைத்தார் மாணவர்.

அன்று எலும்பை எடுக்காமல், பிஸ்கட்டை எடுத்த மாணவர், இன்று மருத்துவ மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் சின்ஸியர் ஆசிரியர்.
சென்ற வாரம்.டெல்லி. இந்தியா கேட்.

''நேரா பாருடா", "கண்ண மூடாத", "பேய் மாதிரி இருக்க" "கொஞ்சமாச்சு சிரிடா"னு என்னை அதட்டி மிரட்டி, தங்கை ஃபோட்டோ எடுத்தாள். பொறுமையில்லாமல் நான் கோபப்பட , அம்மா சமாதானம் செய்ய 15 நிமிடம் கடந்தது தான் மிச்சம். ஒரு ஃபோட்டோ கூட தேறவில்லை. அடுத்து தங்கையையும் மாப்பிள்ளையையும் நிற்க வைத்து, நிறைய ஃபோட்டோ எடுத்தேன். ஃபோட்டோ எடுக்க என்னை அவர்கள் கட்டாயப்படுத்தினர் என்று தான் சொல்லணும். திருமணம் முடிஞ்சு 10 மாதமாகியும், 'புதுமண தம்பதி'னு அவர்களுக்கு நினைப்பு . நான் தான் பலிகடா.

"ஜஸ்ட் 50 ருப்பீஸ் சார் . டூ மினிட்ஸ்ல பிரிண்ட் போட்டு கொடுத்துடுறேன்"னு இளம் ஃபோட்டோகிராபர் ஒருவர் நச்சரித்துக் கொண்டே இருந்தார்.


நால்வரும் குரூப் ஃபோட்டோவுக்கு நின்றோம். 
தங்கை கண்ணை மூடியிருப்பாள், அம்மா சிரித்திருப்பார், நான் வேறெங்கோ பார்த்து கொண்டிருப்பேன்- இப்படி ஏதோ ஒரு காரணத்தால் ஃபோட்டோ எடுத்தபாடில்லை. 

25 நிமிடம் கடந்தது. 
நேரமாகியதால், 'வந்த வரை போதும்'னு ஃபோட்டோ ஷூட்டிங்கை முடித்துக்கொண்டோம். இந்த கார்ட்டூன் நெட்வொர்க் நிகழ்வுகள் அத்தனையையும், 2 வட இந்திய பெண்மணிகள் மிக அருகில் நின்று ரசித்துக்கொண்டிருந்தனர். தமிழ் புரியாவிட்டாலும் நடப்பதை புரிந்து கொண்டு சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், நூற்றுக்கணக்கானவர்கள் வந்து போட்டோ எடுத்துக்கொண்டிருந்த அந்த இடத்தில், இந்த 2 பெண்கள் மட்டும் ஒரு ஃபோட்டோ கூட எடுத்துக்கொள்ளவில்லை.


"ஃபோட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும்" என்ற ஏக்கம் அவர்கள் கண்களில் இருந்ததை கவனித்தேன். தங்கள் வீட்டு சின்ன பையனை மட்டும் செல்ஃபோன் கேமராவில் ஃபோட்டோ எடுத்துவிட்டு கிளம்பினர். இந்த 2 பெண்கள் மட்டும் ஏன் ஃபோட்டோ எடுத்துக்கொள்ளவில்லை ?

**************************

2007ம் ஆண்டு. தஞ்சை.
தங்கைக்கு புடவை எடுக்க ஜவுளி கடைக்கு சென்றிருந்தேன்.
பெண்கள் பிரிவு. நீல புடவை ஒன்று கண்ணை பறிக்க, அதை நான் எடுக்க, இன்னோரு கையும் அதே புடவையை பிடித்தது. திரும்பி பார்த்தால் ஒரு பெண்.
''உங்களுக்கு வேணும்னா எடுத்துக்கோங்க''னு நான் விட்டுக்கொடுத்ததும், புடவைய எடுத்து விரித்து பார்த்தார். ஜமிக்கி ஜரிகை,மயில்,பூ.அழகிய வேலைப்பாடுகள். அவருக்கு அந்த புடவை ரொம்ப பிடிச்சு போயிருந்தது. அவர் கண்ணிலேயே தெரிந்தது. ஆனால் , 2 நிமிஷம் புடவையை ஏக்கமாக பார்த்துவிட்டு, ஏதும் சொல்லாமல் புடவைய வாங்காமல் அவர் கிளம்பிவிட்டார்.

விற்பனை பிரிவில் இருந்தவரிடம் நான் பேச ஆரம்பித்தேன்.
"அண்ணே விலை எவ்ளோ ?"
" 4500"

"விலை ஜாஸ்தினு அவங்க வாங்காம போயிட்டாங்களா ?"
"இவங்க கிட்ட நிறைய பணம் இருக்கும் தம்பி. பணம் இருந்து என்ன செய்ய ? விடிவில்லாம இருக்காங்களே."


புடவையை வாங்கி வந்தேன். தங்கை அந்த புடவை அணிந்த பொழுதெல்லாம் அந்த பெண்ணின் ஏக்கம் நினைவுக்கு வரும்.

*********************

மேலே சொன்ன 2 சம்பவத்துக்கும் ஒரு ஒற்றுமை - ஏக்கம். இந்தியா கேட்டில் சந்தித்த பெண்களுக்கு ஃபோட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஏக்கம். தஞ்சாவூரில் சந்தித்த பெண்ணுக்கு வேலைப்பாடு கொண்ட புடவை அணிய வேண்டும் என்ற ஏக்கம். 

ஏன் ? ஏன் இந்த ஏக்கம் ? 
ஃபோட்டோ எடுத்துக்கொள்ள வேண்டியது தானே . 
புடவை வாங்கிக்கொள்ள வேண்டியது தானே ? 
முடியாதே.
காரணம் ?

இந்த பெண்கள், தலை முதல் கால் வரை கருப்பு அங்கி அணிந்திருந்தார்கள்.
ஃபோட்டோ எடுத்தாலும் முகம் தெரியாது. 

புடவையில், வேலைப்பாடு இருந்தால் என்ன?இல்லாவிட்டால் என்ன ? வெளியே தெரியாது தானே.

மனுசனுக்காக தானே மதம் ?
மனுசங்க மனச சாவடிங்கனு தான் மதநூல்கள் சொல்லிக்கொடுக்கிறதா ?


- பாலாஜி.
ஒருத்தர படுக்க வெச்சி, ஊரே சுத்தி நின்னு அழுதா, அது துக்க வீடு.


ஒருத்தன உக்கார வெச்சி, 6,7 பேர் சுத்தி நின்னு சிரிச்சா அது வைவா எக்சாம்.


# ரெண்டு இடத்துலயும், 'போயிட்டு வரேன்'னு சொல்லக்கூடாது.
நாம : சார் என் ஸ்டேடஸ திருடி ஒருத்தன் அவன் பேஜ்ல போட்டிருக்கான்.
பேஸ்புக் போலிஸ்: நீ எந்த ஏரியா ?

நாம : கடலூர் சார்.
பேஸ்புக் போலிஸ்: இது மதுர. உங்க ஏரியா போலிஸ்கிட்ட கம்ப்ளைன் பண்ணு.

*********************************************



பேஸ்புக் போலிஸ்: ஆண்டிவைரஸ் போட்டுருக்கியா?
நாம : கொஞ்சம் டைம் கொடுங்க சார் வாங்கிடுறேன்.

பேஸ்புக் போலிஸ்: ஸ்ஸேஃப்டி இல்லாம ப்ரவுஸ் பண்ணியிருக்க.கோர்ட்டுக்கு போனா 300. இங்க வெட்டுனா 100. எப்படி வசதி ?





வாழ்றதுக்கும் தங்குறதுக்கும் நிறைய வித்யாசம். 
அறை எண் 320, மஸ்ஜித் மோத் டாக்டர் ஹாஸ்டல், எய்ம்ஸ் - இதுல 2 வருசமா தங்கிகிட்டு மட்டும் தான் இருந்தேன். 

15க்கு 10 அடி அறை . 

"மனிதர்கள் தங்க லாயக்கற்ற இடம்", "bio hazard"னு நண்பர்கள் கிண்டல் பேசும் அளவுக்கு "சுத்தமா" இருக்கும். மாசம் ஒரு தடவயோ, மூணு மாசத்துக்கு ஒரு தடவயோ வெளியூர் நண்பர்கள் தங்குறதுக்கு வந்தா மட்டும் தான் சுத்தம் பண்ணுவேன். மற்றபடி, ராத்திரி வருவேன், 6 அடி இடம் மட்டும் தயார் செஞ்சுட்டு, அதுல தூங்கி,காலைல பல்கலைக்கழகத்துக்கு ஓடிடுவேன். ஹாஸ்டல்ல யாரும் என்னை எந்த கேள்வியும் கேட்டதில்ல.

2 மாசம் முன்னாடி,பிரசவத்துக்காக, கர்ப்பமா இருந்த தங்கைய அழைச்சிகிட்டு அப்பா, அம்மா வந்தாங்க.

முதல் நாள்
**********
அம்மா : போன தடவ நான் வெச்சிட்டு போன சாமி படமெல்லாம் எங்கடா ?
நான் : அங்க தான் இருக்கும்.


அம்மா : சிலையெல்லாம் காணோமே ?
நான்: எங்கயாவது இருக்கும். தேடி பாருங்க.

நான்,ஒவ்வொரு தடவயும், அறைய சுத்தப்படுத்துறப்ப, சாமி சிலை கீழ விழுந்து உடஞ்சிடும். படமெல்லாம் ஏதோ மூலையில என்னைய மாதிரியே குப்பையோட குப்பையா கிடக்கும். இத சொன்னா அம்மா வருத்தப்படுவாங்க. திட்டு விழும். "தேடிப்பாருங்க"னு சொல்லிட்டு நழுவிட்டேன்.சாயங்காலம் அறைக்கு வந்தேன். அம்மா எதுவும் பேசாம உம்முனு இருந்தாங்க.

தங்கை : தப்பு செஞ்சா கூட, அத ஒழுங்கா செய்ய தெரியலடா.
நான் : யேன் ? என்னாச்சி ?

தங்கை : உடஞ்ச சிலையெல்லாம் ஜன்னலுக்கு வெளிய போட்டுவெச்சுருக்க. அம்மா எல்லாத்தையும் பாத்துட்டாங்க.
நான் : ???

அறைய சுத்தப்படுத்துனாங்க. தினமும் விளக்கேத்தி பூஜை.
ஹாஸ்டல் அறைய, வீடா மாத்தி, வாழ்ந்தாங்க.
ஹாஸ்டல்ல இருந்த பல குடும்பங்கள் அம்மாவுக்கு பழக்கமாகிட்டாங்க. வீட்டுக்கு நிறைய பேர் வந்து போக ஆரம்பிச்சாங்க.

ஆனா சின்ன அறையில 4 பேர் தங்குறது எவ்ளோ சிரமம்.

நடக்க கூட இடமில்ல. உக்காரவும், உருளாம படுக்கவும் தான் இடமிருக்கும். இதே அறையில சமையல். பேஸ்ட்,துண்டு, செருப்புனு எதுவும் வெச்சது வெச்ச இடத்துல இருக்காது.சத்தம் போடுவேன். தேடி கொடுப்பாங்க. தினகரன் மட்டும் தான் ஒரே தமிழ் செய்தித்தாள். இவங்களுக்காக அறைக்கு வரவழைச்சோம். காலையில எழுந்ததும், அப்பா, அம்மா, நான் மூணு பேரும் அத படிக்க சண்ட போட்டுப்போம். என் லேப்டாப்புக்கு அப்பா போட்டி. ஃபேஸ்புக்ல டிமிட்ரி,ஹன்ஸானு நிறைய பேருக்கு விசிறியாகிட்டார்.தங்கை, என் லேப்ட்சாப்ல தான் மாப்ளயோட skypeல பேசுவா. எனக்கு தான் சுதந்திரம் பறிபோன மாதிரி.
அடிக்கடி சண்ட போடுவேன்.

15 நாள் முன்னாடி குழந்த பிறந்தது.
4 பேர் தங்குன அறையில இப்போ 5 பேர்.
புதுசா வந்தது நைய்யி நய்யினு அழுதுகிட்டே இருக்கும். தங்கை பால் கொடுத்ததும் தூங்கிடும். திரும்பவும் எழுந்து அழ ஆரம்பிக்கும்.அத பாக்கவே நிறைய பேர் வருவாங்க. எனக்கு துளியும் பழக்கமில்லாத வட இந்திய குடும்பம், அறைக்கு வர ஆரம்பிச்சாங்க. அவங்களுக்கு தமிழ் தெரியாது. அம்மாவுக்கு ஹிந்தி தெரியாது. ஆனா இவங்க நண்பர்கள். குழந்தைய அந்த வீட்டு அம்மா தான் குளிப்பாட்டுவாங்க.

ஒரு நாள் காலை,
தங்கை : குளிச்சியே, சோப்பு எப்டிடா இருந்துச்சு ?
நான் : என் சோப்ப காணோம். ஏதோ வெள்ள கலர் சோப்புல குளிச்சேன். ஆனா கொஞ்சம் கூட வாசனயே இல்ல.

தங்கை (சிரிச்சுகிட்டே) : நீ குளிச்சது பேபி சோப்பு டா.
நான் (அவமானத்த மறச்சிக்கிட்டு) : ஒன்னுத்துக்கும் பிரோஜனமில்லாத சோப்பு. குழந்த வாய திறந்து சொல்ல முடியாதுங்குறதால கம்பனிகாரங்க ஏமாத்துறாங்க.
தங்கை : (சிரிப்ப நிறுத்தவேயில்ல)

2 நாள் முன்னாடி பரதேசி படம் பார்த்தேன். 

மனசுல துக்கம் தொத்திகிச்சு. ஏதோ கோவம். எதுவும் செய்ய முடியாத ஆற்றாமை. வீட்ல இருந்த எல்லார் மேலயும் எரிஞ்சி எரிஞ்சி விழுந்தேன். யாரும் எதுவும் பேசல. அம்மா மட்டும்,
"இன்னைக்கு உனக்கு சந்திராஷ்டமம். அதான் நேரம் சரியில்ல"னு அமைதியா சொன்னார்.


'காற்றோட்டம் இல்லாத சின்ன அறையில குழந்தைய வெச்சிருக்ககூடாது'னு, முந்தா நாள் சண்ட போட்டு ,அவசரமா அவங்க 4 பேருக்கும் சென்னைக்கு ப்ளைட் டிக்கெட் புக் பண்ணினேன்.
நேத்து ப்ளைட். 


எனக்கு முக்கியமான வகுப்பு. வழியனுப்ப போக முடியல.
ஃபோன் பண்ணேன்.
நான் : பத்திரமா ஏர்போர்ட் போயிட்டீங்களா ?
அப்பா (டெல்லி விமான நிலையத்துலயிருந்து) : வந்துட்டோம். க்யூவுல நிக்கிறோம்.


நான் : இறங்குனதும் ஃபோன் பண்ணுங்க.
அப்பா : சரி டா. ரூம்ல 4 அவிச்ச முட்ட வெச்சிருக்கோம். நீயும் ஃரெண்ட்சும் சாப்பிடுங்க.

நான் : (என்ன பேசுறதுனு தெரியல. 'துரத்திவிட்டதே நான் தான்'னு குற்ற உணர்ச்சி.)

சாயங்காலம் அறைக்கு வந்தேன்.
யாருமே இல்ல. திடீர்னு அறை ரொம்ப பெருசா தோணுச்சு.
ஏ.சி போட்டுவெச்சிட்டே போயிருக்காங்க. அதனால அறை எப்போதுமில்லாத அளவுக்கு ரொம்ப ஜில்.

பேச்சு , சண்ட,அழுவைனு இருந்த இடத்துல இப்போ முழுஅமைதி.
வழுச்சி எடுத்த மாதிரி சுத்தமான அறை.
நான் மட்டும் தனி ஆள். 

போட்டிக்கு யாருமே இல்லை.
பெரிய மெத்தை. தனியா தூங்கலாம்.
எவ்வுளவு வேணாலும் ஃபேஸ்புக் பார்க்கலாம். கண்டிக்க யாருமில்ல.
சொர்க்கம் தான்.
ஆனா…. ஏதோ வித்யாசம்.
ஏதோ இல்லாத மாதிரி.....


நய் நய்னு குழந்த அழுதப்போ நால்லாத்தான் தூங்கியிருக்கேன். ஆனா நேத்து ராத்திரி சரியா தூக்கமில்ல. 
"கலவரம். நிறைய பேர் கத்தியோட சண்ட போடுறாங்க. வெட்டிக்குறாங்க. ரத்தம்.பிணம். கார் ஓட்டி தப்பிக்கிறேன். …"-இப்படி ஒரு திகில் கனவு .

இன்னைக்கு காலைல எழுப்ப யாருமில்ல. 

செல்ஃபோன் அலாரம் எழுப்பிவிட்டது.
ராத்திரி நான் அவிழ்த்து போட்ட துணிகள் அதே இடத்துல கிடந்துச்சு..
தினகரன் பத்திரிக்கை தரையில் மடித்தபடியே. படிக்கவேயில்ல. போட்டிபோட யாருமில்ல.
பேஸ்ட், துண்டு, செருப்புனு எல்லாம் நான் வைக்கும் அதே இடத்தில். சுலபமா எடுத்துட்டு குளிக்க போனேன்.
பாதி குளியல்ல தான் கவனிச்சேன். அதே வெள்ள சோப்.


காதல், குடும்பம், நட்பு - மூணுக்கும் பொதுவான ஒரு விஷயம் :- "பிரிஞ்சதுக்கப்புறம் தான் அருமை புரியும்"

- பாலாஜி.