மருத்துவம் 
தடுப்பூசி - பாகம் 1 
**************************

நம் உடலில் இயற்கையாக உள்ள எதிர்ப்பு சக்தி பற்றிய சிறு குறிப்பு
**********************************************************
Bacteria, Virus போன்ற கிருமிகள் நம் உடலை தாக்கும் பொழுது, அவை உடலுக்குள் புகுந்து, உடலில் இனப்பெருக்கம் (multiplication) செய்துவிடும். கிருமிகள் உடலுக்குள் புகுதலை infection என்று அழைக்கிறோம். இந்த கிருமிகள் நம் உடலுக்கு நோயை (Disease,illness) உண்டாக்கும்.இந்த கிருமிகளுக்கு எதிராக, நம் உடலின் எதிர்ப்பு சக்தி, பல வழிகளில் போராடும்.



நம் உடலின் எதிர்ப்பு சக்தி எவ்வாறு கிருமிகளுக்கு எதிராக போராடும் ?
நம் உடலில் , நோய்களுக்கு எதிராக போராட B-lymphocytes, T-lymphocytes மற்றும் Macrophages என்ற வெள்ளை அணுக்கள் இருக்கின்றது . ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பணி. 
உதாரணம் : macrophageன் பணி கிருமிகளை சாப்பிட்டு (முழுங்கி ) செரித்துவிடுதல்.


முதன் முதல் நம் உடலில் கிருமி நுழையும் பொழுது உடலின் எதிர்ப்பு சக்தி , அந்த கிருமியை அழித்து, infectionஐ நீக்க பல நாட்கள் ஆகலாம். நம் எதிர்ப்பு சக்தி, இந்த கிருமியை பற்றியும் அதன் குணாதிசியத்தை பற்றியும் அதை எப்படி அழிக்க வேண்டும் என்பது பற்றியும் நினைவில்(memory) வைத்திருக்கும். அடுத்த முறை அதே கிருமி தாக்கும் பொழுது, கிருமியை உடனே அழித்து உடலை காக்கும்.


________________________________________________________

தடுப்பூசி(vaccine) எவ்வாறு செயல்படுகிறது ?
தடுப்பூசி நம் உடலில் (குறிப்பிட்ட) நோய் எதிர்ப்பு சக்தியை (immunity ) உண்டாக்கும்.

தடுப்பூசி எப்படி நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் ?
தடுப்பூசியில், நோய் தாக்கும் அதே கிருமிகள் இருக்கிறது.

"என்னது தடுப்பூசியில் கிருமிகளா?"னு பயப்படாதீர்கள்.
தடுப்பூசியில் உள்ள கிருமிகள் கொல்லப்பட்டிருக்கும் அல்லது அந்த கிருமிகள் செயற்கை முறையில் செயலிழக்கச் செய்யப்பட்டிருக்கும். அதனால் தடுப்பூசியை , நம் உடலில் செலுத்தியவுடன், 'கிருமியினால் ஏற்படும் infection'ஐ போன்றே தடுப்பூசியும் பாவனை (imitate ) செய்யும். ஆனால் நோயை உண்டாக்காது.
(உதாரணம் : ஒரு கண்ணாடியில் கத்தியின் பிம்பம் தெரிகிறது . பிம்பத்தினால் நமக்கு ஆபத்து இல்லையே. )


தடுப்பூசி செய்யும் இந்த பாவனையால் (நோய் போன்றே imitate செய்தல்) நமக்கு நோய் உண்டாகாது. ஆனால் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் T-Lymphocyteகளையும் , எதிர்ப்பு சக்தியை தரும் antibodiesகளை உண்டாக்கும் B-Lymphocyteகளையும் தூண்டிவிடும்.
(கண்ணாடியில் தெரியும் கத்தியின் பிம்பத்தை பார்த்து, நாம் பயந்து கத்துவது போல், நம் உடலும், ஆபத்தில்லாத தடுப்பூசியை பார்த்து, ஏமாந்து போய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கிவிடும்.)



கொஞ்ச நேரத்தில் அந்த நாடகம் (நோய் கிருமி தாக்கியது போன்ற பிம்பம் ) முடிவுக்கு வந்துவிடும். ஆனால் T-Lymphocyteகள் இந்த கிருமி பற்றி நியாபகத்தில் வைத்திருந்து, அடுத்த முறை,உண்மையான கிருமி உடலை தாக்கினால், இவை எதிர்ப்பு சக்தியை உண்டாக்கி கிருமியை கொன்று உடலை காக்கும் .

_______________________________________________________

"இயற்கையாக நோய் வந்தால், நம் உடல் , எதிர்ப்பு சக்தியை தானாகவே உண்டாக்குகிறது"னு சொல்றிங்களே, அப்புறம் எதற்கு இந்த தடுப்பூசி ? நான் நோயை இயற்கையாகவே பெற்றுக்கொள்கிறேன். எனக்கு தடுப்பூசி தேவையில்லை தானே ?னு சிலருக்கு கேள்வி எழலாம்.

விடை : இயற்கையாக நோய் தாக்கினாலும் எதிர்ப்பு சக்தி உண்டாகும் என்பது சரி தான். ஆனால் அப்படி இயற்கையாக வரும் நோய்களில் பல ஆபத்தான விளைவுகள் (complications) வரலாம்.நோய் தாக்கிய சிலர் இறந்தும்விடலாம். அதனால் நோய் வராமல் தடுக்கவே தடுப்பூசி போடப்படுகிறது.

ஆதாரம் : Centre for Disease Control and Prevention, Atlanta, USA
http://www.cdc.gov/vaccines/hcp/patient-ed/conversations/downloads/vacsafe-understand-color-office.pdf


தடுப்பூசிகளின் வகைகள் என்ன? இந்திய அரசு இலவசமாக அளிக்கும் தடுப்பூசிகள் என்ன? தடுப்பூசிகளின் பக்க விளைவுகள் என்ன ?- போன்ற கேள்விகளுக்கு விடை அடுத்த பாகத்தில் எழுதுகிறேன்.

அன்புடன்,
மருத்துவர். கார்த்திக் பாலாஜி.